சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.008
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புண்ணியர், பூதியர், பூத நாதர், பண் - நட்டபாடை (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pI9ZRgAtuME |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.008  
புண்ணியர், பூதியர், பூத நாதர்,
பண் - நட்டபாடை (திருத்தலம் திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீச்சுரர் திருவடிகள் போற்றி )
புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள் கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம் விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும் பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [1] |
முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும் அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில் பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [2] |
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார், இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம் தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [3] |
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும் ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம் பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப் பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [4] |
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார், வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம் கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி, பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [5] |
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார், ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம் சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க, பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [6] |
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம் கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப் பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [7] |
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன் வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும் கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி, பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [8] |
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட, சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும், பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [9] |
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத் துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [10] |
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப் பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல், கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே. | [11] |